Saturday 10 August 2019

ஆத்தங்கரை மண்டபம்


                  ஆத்தங்கரை மண்டபம்
                                 ~~~~~~

     உச்சி வெய்யில் பொறுக்காமல் மர நிழலில் ஒதுங்கி ஆற்றையும் அக்கரையையும் நோட்டம் விட்டான் சந்நியாசி. பல ஆண்டுகளாய் நீர்வரத்து இல்லாததால் மண்டிப்போன புதர்கள் ஆற்றின் கரையளவு உயர்ந்து காடு போலத் தோற்றம் தந்தது.

    அக்கரையில் பராமரிப்பே இல்லாத பாழடைந்துபோன அந்த மண்டபம், அதனருகே ஆலமரம், பாலம் வழியே கடந்தால் பதினந்து நிமிடங்களில் அந்த மண்டபம் வரும்.

    பத்தரை மணி பஸ்தான் பாலத்தைக் கடக்கும் கடைசீ போக்கு வரத்து, அதற்குப்பின் விடியும் வரை ஆள் நடமாட்டம் இருக்காது, வேட்டியை உருவி முக்காடாய் போட்டுக்கொண்டு நடந்தால் ஆள் நடமாட்டம் இருந்தாலும் யாருக்கும் அங்க அடையாளம் தெரியாது. ராத்திரி நிலா வெளிச்சம் ஓரளவுதான்  இருக்கும்.
என்ன நடந்தாலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது, அதான் சரியான இடம் என்று தேர்வுசெய்து கொண்டான் சந்நியாசி.

    மெல்லியதாக செல்போன் அதிரவும் தாவி எடுத்து ஆன் செய்து காதில் வைத்துக் கொண்டாள் செல்வி. " ம்..சொல்லு...ம்.. அத்தையின் வீட்டுக்குப் போய் சேர்ந்துட்டதா இப்பதான் போன் பண்ணாங்க...ஆமா அப்பா அம்மா ரெண்டு பேருந்தான்..இல்ல.. விடியதான் வருவாங்க..இல்ல, ஆயா தூங்க பத்தரை ஆயிடும், ம்..தெரியும் ஆத்தோர மண்டபம் தானே..ம் வரேன்... ஆனா நீ என்னை ஏமாத்திட மாட்டீல்ல..
கட்டிப்பேல்ல...உங்கம்மா சத்தியமா?..ம் சரி..போனதடவை மறந்தது போல இல்லாம  இந்த தடவை மறக்காம வாங்கிட்டு வந்திடு.. இல்லைன்னா அவ்ளோதான்..என்னைக் கேட்டா..உன் சவுரியத்துக்கு வாங்கு... வெள்ளை டிரஸ்ஸா?.. அழுக்காயிடுமே.. ம்..சரி...குதிரை வாலா?.. ம்கும்..'போ' நீ வாங்கித் தந்ததேல்ல.. தலையில மாட்டிகிறது.. அது போட்டு வரேன்..ஐயோ ஆயா!" அவசரமாக துண்டித்தாள் செல்வி.

    அறை வாசலில் நின்ற ஆயா "நேரங்காலம் இல்லாமல போன் பேசிட்டே இருக்கே ..சாப்பாடு எடுத்துப் போட்டு  சாப்டுடீ..மணி ரெண்டாவப் போவது...என்ன வளர்ப்போ போ" என்றதை காதில் வாங்காத செல்வி இரவை நினைத்து பூரிப்பானாள்.

    சந்நியாசி நீட்டிய தாளில் கடைசீ யா எழுதியிருந்த '....பேப்பரில் மடித்துத் தரவும்' வரியால் கடுப்பாகிப்போன கடைக்காரர் அவனை முறைத்தவாறே "கெட்டுத் தொலையறது ன்னு  முடிவாயிட்டு அப்றம் எதுக்கு மூடி மறைக்கிற வேல சனியம்புடிச்சுதுங்க" என்றவாறே பொட்டலமாக மடித்துத் தந்தார்.

     இரவாயிற்று. "ராத்திரி நேரத்தில அரிவாளும் கையுமா எங்கேடா கிளம்பிட்டே" என்ற அம்மாவிடம் "வயிறு கடமுடாங்குதும்மா ஆத்தோரம் போய்ட்டு வரேன்" என்றுசொல்லி தண்ணீர் சொம்பை எடுப்பது போல் எடுத்து வாசலருகே வைத்துவிட்டு மறக்காமல் மாடத்திலிருந்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு நடந்தான் சந்நியாசி.

    வேட்டியை முக்காடகப் போர்த்திக் கொண்டு பாலத்தைக் கடந்து கரையொர இடப்பக்க ஒத்தையடிப் பாதையில்  நடந்து மண்டபத்தருகே வந்ததும் திரும்பிப் பார்த்தான், பாலத்திலும் யாரும் இல்லை, சாலையிலும் யாரும் இல்லை, நேராக பாதை போய்ச்சேரும் பக்கத்து கிராமத்தைப் பார்த்தான்.. ஆள் அரவமேயில்லை. "இதுவரை எல்லாமே சரியாவே போகுது" என்றெண்ணிய படியே சட்டென மண்டபத்தினுள் நுழைந்தான்.

      காலில் இருக்கும் கொலுசை ஓசைபோடாமல் கழட்டித் தலையணைக்கு கீழே வைத்து, செருப்பை கையில் எடுத்துக்கொண்டு பின்பக்க வழியாய் ஒத்தையடிப் பாதை ஏறிய செல்வி பாட்டியின் நடமாட்டம் தெரியுதா எனத் திரும்பிப் பார்த்தாள், ஒன்றும் தெரியவில்லை. எதிரே தொலைவில் மண்டபத்தையும் பாலத்தையும் பார்த்தாள், செருப்பைக் காலில் போட்டு நிதானமாய் நடந்தாள்.

    கீழே கிடந்த சருகுகளை காலால் தள்ளி இடத்தை ஒழுங்கு பண்ணி முன்னெச்சரிக்கையாக பாலத்தை பார்த்தபடி தரையில் உட்கார்ந்து அரிவாளை அருகில் வைத்துக் கொண்டான் சந்நியாசி.  முக்காடாகப் போட்டிருந்த வேட்டியை விலகிவிடாம இறுக்கினான். "எதான்னாலும் ஒரு ரசனை வேணும்டா" என தனக்குத் தானே சொல்லி செல் டார்ச் ஆன்செய்து மடியில் வைத்துவிட்டு ஒரு சிகரட்டை வாயில் வைத்து லைட்டரை எடுத்து உரசிப் பொருத்தினான்.தடயம் எதும் இருக்க கூடாதென்று மறக்காமல் லைட்டரை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். முதல் அனுபவம் என்பதால் காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல அவன். புகையை ஏகத்து இழுக்கப்போய்  இருமல் வந்தும், விடாமல் கப்கப்பென்று அடுத்தடுத்து அவசரஅவசரமாக புகையை இழுத்து ஊதித் தள்ளினான்.. மண்டபம் புகை மண்டலமாயிற்று.

     பாலத்திற்கு முன்பாகவே சாலையை குறுக்காக கடந்து வலப்புறம் வண்டியை நிறுத்தி விட்டு செல்வியின் கிராமத்திற்குப் போகும் ஒத்தையடிப் பாதையைப் பார்த்தான் பிரபு, வெறிச்சோடி கிடந்தது, நிலா வெளிச்சம் அதிகமில்லை. பத்து நிமிடம் நடந்தால் மண்டபம் வந்துடும், நேரம் சரியாக இருக்கும் என்று கணக்கிட்டான்.

    மறக்காமல் நாவற்பழம் இருக்கும் பையை எடுத்துக்கொண்டான் "இதில் என்னதான்  இருக்கோத் தெரியலை, கிடைக்கவும் மாட்டுது, விலைவேற அதிகமா சொல்றானோ. இதுமேல போய் இவளுக்கு ஏன் இவ்வளவு இஷ்டம்? இன்னைக்கு கேட்டுடனும்" என்று நினைத்தபடி பாதையில் நடக்கத் துவங்கினான். தூரத்தில் வெள்ளையாய் ஒரு உருவம் தெரிந்தது செல்விதான், "சொன்ன நேரத்திற்கு வந்துட்டா" என சிரித்துக் கொண்டான். சுறுக்கென்று முள் குத்தவே "செருப்பைத்தாண்டி குத்துதே கருவ முள்ளோ" என்று குனிந்து செல் டார்ச் ஒளியில் பார்த்தான்.

   அதிக ஓசை எழுப்பாமல் கவனமாக நடந்தாள் செல்வி. அவளது நடை மெதுவானாலும் எண்ணங்கள் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தன. "செருப்பை ஆலமரத்து கிட்டேயே விட்டுடனும், திரும்பி வரும்போது மறந்துட்டா கூட காலைல பாக்குற யாருக்கும் சந்தேகம் வராது, பகல்ல கூட வந்து எடுத்துக்கலாம்.அடுத்த முறை மாந்தோப்பு தான் சரி, இங்க வர்றது கொஞ்சம் பயமாதான் இருக்கு. அவன்ட்ட சொல்லிடனும், போனதடவை மாதிரி ரொம்ப நேரம் இருக்கக் கூடாது சீக்கிரம் திரும்பிடனும், பாட்டி முழுச்சிடக் கூடாது" சாலையின் சரிவில் இறங்கி ஆலமரம் அருகே காலணிகளைக் கழட்டி விட்டு நடந்தவளுக்கு "திரும்பி போறப்ப பாட்டி முழுச்சிருந்தா என்ன பண்றது" என்ற எண்ணம் வர பகீர் என்று பயம் பற்றிக் கொள்ள பயத்தோடே மண்டபத்தை அணுகையில் அங்கே புகைக்கு நடுவே வெள்ளையாய்....பேய்..."வீவீவீல்ல்ல்ல்" வந்தவழியே பறந்தாள் செல்வி.

     திடீர சத்தம் கேட்டு சட்டென திரும்பிய சந்நீயாசிக்கு 6 அடி உயரத்திற்கு வெள்ளையாய் தலையை விரித்துப் போட்டு ஒரு பேய் போவது தெரிய அனிச்சையாய் அரிவாளையும் செல்லையும் பற்றிக் கொண்டு ஒரே தாவலில் ஆற்றின் குறுக்கே பாய்ந்தான் முள்ளும்,புதரரும் குத்துவது உணராமல், முதன் முதலாய் பிடித்த சிகரட் வாயிலிருந்து வீழ்ந்தது தெரியாமல் ஓடினான், நடுங்கும் உடலோடு ஒடியவன் திரும்பிப் பார்க்க அந்தப் பேய் கரையோரம் பறந்து போவது தெரிய தலைசுற்றி விழுந்தான்.

     குத்தியது பெரிய கருவமுள் தான் எனத்தெரிய அதைப் பிடுங்கிய பிரபு திடீரென வந்த சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான், தூரத்தில் செல்வி ஓடுவது தெரிய "ஏன் ஓடுறா" என்றெண்ணியபடி ஓட்டமும் நடையுமாக மண்டபம் வந்து வெளிச்சம் அடித்துப் பார்க்க அங்கே
மண்டப தரையில் ஒரு சிகரட் கிடப்பதை பார்த்து "எனக்காக வாங்கியாந்தா போல" என்றெண்ணி சிரித்துக் கொண்டான், "அதென்ன பக்கத்தில பொட்டலத்தில ரெண்டு சுருட்டு ரெண்டு  பீடி லாம்..  அவ்ளோ கேவலமா நினச்சுட்டாளா என்னைய?..."

    கோபமா செல் போன் நம்பர்களைத் தட்டி "ஏய் ..செல்வி...எங்கடீ ஒடிட்ட...குந்தாணி... வர சொல்லிட்டு வேடிக்கையா காட்ற " என்றான் பிரபு.

                            -முற்றும்-

    "இந்தா பால்.. ஆர்றதுக்கு முன்னாடி குடி..என்னாது அது.. காலைலேர்ந்து உக்காந்து எழுதிட்டே இருக்க..?"

    "அது... நம்ம ஆத்தங்கரை மண்டப சங்கதி... கதையா எழுதிருக்கேன்.. சிறுகதைப் போட்டிக்கு.."

    " எங்க காட்டு.. நானும் பாக்குறேன்..
என்னது...'செல்வி...குந்தாணியா?'..
என்னைய குந்தாணி ன்னுலாம் சொல்வியா நீ.. குந்தாணி ன்னுலாம் சொல்வியா... சொல்வியா..சொல்வியா.."

    "இருடி..அடிக்காத...அடிக்காதடீ..
இருடின்னா..அட ..இருடி ன்னா...அதெல்லாம் கதைக்காக டி.. கதைக்காக.." என்றான் பிரபு

    "கதைக்காக கூட என்ன அப்படி சொல்வியா, அப்ப மறுநாளு கடைக்கார் மூலமா சந்நியாசி  பேயோட்றதுக்கு உங்கப்பாரு கிட்ட வந்ததையும், நீ அவன்ட்ட விவரம் கேட்டு சிரிச்சதையும், என் செருப்பு காணா போனதையும், நீ நாவபழம் வாங்கியே தராததையும் சேர்த்து  சொல்றது தானே"

    "அதெல்லாம் அடுத்த பாகத்தில சொல்வோம் ல"

    "ஓ..இதில் ரெண்டாம் பாகம் வேறவா..வெளங்கும்..பால் ஆறுது பாரு".

                                     ****

No comments:

Post a Comment